Skip to content
Home » தமிழக சட்டமன்றம் நாளை கூடுகிறது.. கவர்னர் உரையாற்றுகிறார்…

தமிழக சட்டமன்றம் நாளை கூடுகிறது.. கவர்னர் உரையாற்றுகிறார்…

ஆண்டுதோறும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நாளை கூடுகிறது. காலை 10 மணிக்கு கூடும் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துகிறார். சட்டசபைக்கு வரும் கவர்னர் ஆர்.என்.ரவியை தலைமைச் செயலக வளாகத்தில் சபாநாயகர் மு.அப்பாவு, அரசு தலைமை கொறடா கோவி செழியன், சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள். பின்னர் கவர்னருக்கு பேண்டு வாத்தியத்துடன் கூடிய போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும். அதை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொள்வார். அதன் பின்னர் அவரை சபாநாயகர், சட்டசபை செயலாளர் ஆகியோர் சட்டசபை மண்டபத்திற்கு அழைத்து வருவார்கள். கவர்னர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் தனது உரையை வாசிப்பார். மக்கள் நலத்திட்டங்களின் நிலை, அவற்றை அரசு செயல்படுத்தும் விதம், அரசின் புதிய கொள்கைகள், புதிய திட்டங்கள் பற்றி அவர் உரை நிகழ்த்துவார். சுமார் ஒரு மணிநேரம் கவர்னர் உரை நிகழும். அதைத்தொடர்ந்து கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் மு.அப்பாவு வாசிப்பார். காகிதம் இல்லாத சட்டசபை என்பதால், அவர்களின் உரைகள், சட்டசபையில் உள்ள தொடுதிரை கம்ப்யூட்டர்களில் திரையிடப்படும். கவர்னர் மற்றும் சபாநாயகரின் உரை முழுவதும் இணையதளத்தில் நேரலை செய்யப்படும். உரையை சபாநாயகர் வாசித்து முடிந்ததும் அன்றைய அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும்.பின்னர் சபாநாயகர் அலுவலகத்தில் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெறும். அதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்பார்கள். அவையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? அதில் என்னென்ன அலுவல்களை எடுத்துக்கொள்ள வேண்டும்? என்பது பற்றி முடிவு செய்யப்படும். நாளை மறுநாள் 10-ந் தேதி சட்டசபை கூடியதும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.யாக இருந்த திருமகன் ஈவெராவின் மரணம் குறித்த இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்படும். அவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் அன்று முழுவதும் அவை ஒத்திவைக்கப்படும் என்று தெரிகிறது. அதன் பின்னர் 11-ந் தேதி சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன் மீது விவாதிக்க எம்.எல்.ஏ.க்கள் அழைக்கப்படுவார்கள். சட்டசபை கூட்டத்தொடரின் இறுதி நாளில் எம்.எல்.ஏ.க்களின் விவாதத்திற்கு முதல்-அமைச்சர் பதில் அளிப்பார். முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!