மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, மோப்ப நாய் உதவியுடன் பல்வேறு பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
மதுரை பழைய கலெக்டர் அலுவலகம் மற்றும் கூடுதல் கட்டிடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நேற்று இ மெயில் வாயிலாக மதுரை மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்பநாய் உதவியுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு பல்வேறு பகுதிகளிலும் இருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இதன்படி கலெக்டர் அலுவலகத்தின் பழைய கட்டிடம், கூடுதல் கட்டிடம் என இரு இடத்திலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடந்தது. இதன் முடிவில் எங்கும், எந்தவிதமான வெடிபொருளும் கண்டறியப்படவில்லை.
இதனால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதியானது. இந்த வெடிகுண்டு மிரட்டல் மற்றும் சோதனை பணிகளால், கலெக்டர் அலுவலக வளாகம் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. கடந்த பிப்.3 மற்றும் கடந்தாண்டு டிசம்பர் மாதமும் இதேபோல் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

