குன்றத்தூர் அருகே அரசு பேருந்தும் பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய பிளஸ்-2 மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குன்றத்தூர் அடுத்த இரண்டாம்கட்டளை, சந்திரசேகரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது மகன் சரவணன் (17), அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் டியூஷனுக்குச் சென்றுவிட்டு, தனது பைக்கில் சரவணன் வீட்டிற்குப் புறப்பட்டார்.
குன்றத்தூர் – பல்லாவரம் பிரதான சாலையில் ஆண்டாள்குப்பம் அருகே அவர் வந்தபோது, எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சரவணன், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், மாணவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவன் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

