Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் ஸ்டாலினே கொரோனாவால் போயிருப்பார்!..இபிஎஸ் சர்ச்சை பேச்சு… கண்டனம்

திமுக ஆட்சியில் கொரோனா வந்திருந்தால், முதல்வர் ஸ்டாலின் கொரோனாவிலேயே போயிருப்பார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அவருக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர், சசிகலா- ராமதாஸ் கூட்டணி என 5 முனை போட்டி நிலவுகிறது.

தேர்தலுக்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் திநகரில் சத்யாவை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது கூறியிருப்பதாவது: என் மீது தேவையில்லாத அவதூறுகள் பரப்பப்படுகின்றன.

தொகுதி மறுசீரமைப்பால் எந்த பாதிப்பும் இல்லை என மத்திய அரசு தெளிவாக கூறிவிட்டது. நாடாளுமன்ற தொகுதி வரையரையால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை.

வரும் சட்டசபை தேர்தல் குறித்து பேசுவதை விட்டுவிட்டு நாடாளுமன்றத் தொகுதி வரையறை குறித்து ஸ்டாலின் பேசி வருகிறார். கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த அடுத்த நாள் தேர்தல் வாக்குறுதிகளை ஜெட் வேகத்தில் வெளியிட்டோம்.

திமுகவை போல் 10 நாள் கழித்து வெளியிடவில்லை. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களால்தான் இன்று தமிழகத்தில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கடைகளில் வாங்கும் அரிசியை விட தரமான அரிசி நியாயவிலை கடைகளில் வழங்கப்படும். திமுக ஆட்சியில் கொரோனா போன்ற பேரிடர்கள் இல்லை. அப்படி வந்திருந்தால் முதல்வரே கொரோனாவில் போயிருப்பார்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.

கனிமொழி கண்டனம்
இதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கண்டனத்தை தெரிவித்துள்ளன. இதுகுறித்து கனிமொழி கூறுகையில், தி.நகரில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கோவிட்-ல் முதலமைச்சர் இல்லாமல் போயிருப்பார் என்று பேசியிருக்கிறார். பழனிசாமி… இது ஒரு தேர்தல்தானே? இவ்வளவு கீழ்த்தரமாகவா இறங்கிப் பேச முடியுமா?. ஒரு தேர்தலுக்காக தமிழ்நாட்டின் முதலமைச்சரை, திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவரை, எப்படி இன்னொரு மனிதனைப் பார்த்து, நீ கொரோனோவில் இல்லாமல் போயிருப்பாய்னு என்று சொல்லக்கூடிய அளவுக்கு கேவலமாக நீங்கள் இறங்கிவிட்டீர்கள் என்று நினைத்துப் பார்க்கும்போது, தமிழ்நாட்டு மக்கள் உங்களைத் தூக்கி எறியக்கூடிய நாள் நெருங்கிவிட்டது.

நான் ஒன்றுமட்டும் சொல்கிறேன். உங்கள் தரத்திற்கு இறங்கி எங்களுக்கு பேசத் தெரியாது. ஆனால், எங்கள் பரம்பரைக்கு ஒரு கதை இருக்கிறது. சரித்திரம் இருக்கிறது. எங்களை எதிர்த்தவர்களுக்கு மலர் வளையம் வைத்தவர்கள் நாங்கள். அதனால, முதலமைச்சர் கிட்ட, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின பத்தி என்ன பேசுறீங்கன்னு தெரிந்து பேசுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!