2 – வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : கோவை கோர்ட்டு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிப்பு !!!
கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணணன் என்பவர், தனது உறவினர் முறையிலான 2 வயது சிறுமியை கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் 28 அன்று மாலை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று உள்ளார். அங்கு வைத்து அந்த சிறுமிக்கு அவர் தீவிர பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜேஷ்கண்ணணனை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிவு அடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ராஜேஷ்கண்ணணனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
