சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, பாரத், இந்துஸ்தான் மற்றும் இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று சிலிண்டர் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
அந்த வகையில், இன்று பிப்ரவரி 1-ம் தேதி வெளியிடப்பட்ட புதிய அறிவிப்பின்படி, சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 1,899.50 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது கடந்த மாதத்தைப் போலவே 868.50 ரூபாய் என்ற விலையிலேயே நீடிக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இந்தத் தொடர் விலை உயர்வு உணவக உரிமையாளர்கள் மற்றும் சிறு வணிகர்களிடையே பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

