ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை முதல் தெருவை சேர்ந்தவர் ராஜ மார்த்தாண்டம். இவர் அதிகாலையில் நடைபயிற்சி செல்வதற்காக தனது மோட்டார்சைக்கிளை அங்குள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் நிறுத்தி சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை. இதேபோல் சலவை தொழிலாளர் தெருவை சேர்ந்த மாதவன் தனது மோட்டார் பைக்கை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார்.
அதையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக இருவரும் முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், தற்போது அது தொடர்பான சிசிடிவி
காட்சிகள் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது அந்த காட்சியில், நைசாக அந்த பகுதிக்கு வரும் ஆசாமிகள் லாவகமாக மோட்டார் பைக்கை திருடிச் செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு முதுகுளத்தூர் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வருவதால், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே தினந்தோறும் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து சென்று பைக் திருட்டை தடுத்து பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.