வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். 3ம் தேதி புயலாக மாறும். 4ம்தேதி மாலை இந்த புயல் சென்னைக்கும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும்என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னையில் மழை மற்றும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகரில் உள்ள அனைத்து பூங்காக்களும் மூடப்பட்டுள்ளன. நகரில் 162 முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. புயல் தாக்கினால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் கூறியதாவது:
வங்க கடலில் உருவாகும் மிக்ஜாம் புயல், ஆந்திரா மாநிலத்தில் தான் கரையை கடக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்த புயல் காரணமாக வரும் 3 மற்றும் 4ம் தேதிகளில் 36 மணி நேரம் வட தமிழகத்தில், அதுவும் கரையோர பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 4ம் தேதி புயல் கரை கடந்ததும் மழை படிப்படியாக குறையும். புயல் கரையை நெருங்கும் நேரத்தில் அது நகராமல் ஒரே இடத்தில் நின்று விட்டால் அந்த பகுதியில், குறிப்பாக சென்னையில் மிக அதிக மழை பெய்யலாம். தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாகத்தான் நகர்ந்து கொண்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.