Skip to content
Home » திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா….. நாளை கொடியேற்றம்… டிஜிபி நேரில் ஆய்வு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா….. நாளை கொடியேற்றம்… டிஜிபி நேரில் ஆய்வு

  • by Senthil

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவார்கள்.

இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அப்போது விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி மாட வீதி உலா நடைபெற உள்ளது.

தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 4.45 மணியில் இருந்து 6.12 மணிக்குள் சாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று காலை

மற்றும் இரவில் விநாயகர், வள்ளி- தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 2-ம் நாள் விழாவில் இருந்து 9-ம் நாள் விழா வரை காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் மாட வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி விழாவும் நடைபெற உள்ளது. 23-ந் தேதி (7-ம் நாள் விழா) பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடைபெற உள்ளது.

கார்த்திதை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 26-ந் தேதி (10-ம் நாள் விழா) அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அன்று இரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதி உலாவும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகத்தினர் செய்து  உள்ளனர்.

கொடியேற்ற விழா நாளை நடைபெற உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து   தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி   சங்கர் ஜிவால் இன்று  திருவண்ணாமலை கோயிலில் ஆய்வு செய்தார்.  திருவிழா நாட்களில் பாதுகாப்பு, பக்தர்களுக்கான   வசதிகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன்  வடக்கு மண்டல ஐஜி கண்ணன். டிஐஜி  முத்துசாமி  ளயமே மற்றும் அதிகாரிகள் வந்திருந்தனர்.  இந்த ஆய்வுக்காக  டிஜிபி சங்கர் ஜிவால் சென்னையில் இருந்து  திருவண்ணாமலைக்கு போலீஸ் வேனிலேயே வந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!