சென்னை, மாதவரத்தை சேர்ந்தவர் சண்முகம், ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் கார் ஓட்டுநர் பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று காலை மாதவரம் ரவுண்டானா அருகே 2 பெண்களுக்கு காரில் பயிற்சி அளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று காரின் முன் பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சண்முகம் உடனே காரை சாலையோரம் நிறுத்திவிட்டு காரில் இருந்த 2 பெண்களுடன் கீழே இறங்கினார்.
உடனே, கார் முழுவதும் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ரசாயனம் கலந்த நீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து மாதவரம் காவல் நிலைய போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
