ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் பவானி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்.பி. பேசியதாவது: தமிழகத்திற்குத் துரோகம் செய்வதற்காகவே ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளது எதிரணி. கூட்டணியின் உண்மையான தலைவர் பாஜக தான். அங்கு சொல்வதை கேட்டு கைகட்டி நிற்பவர்தான் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவை அமித்ஷா திமுக என்று மாற்றிவிட்டார். ஒன்றிய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை.
தமிழக மக்கள் கடுமையாக எதிர்த்த சி.ஏ.ஏ திட்டத்தைக் கொண்டு வர உறுதுணையாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. அதேபோல், நீட் தேர்வை அனுமதித்து, அதற்குத் துணை நின்றவரும் அவரே. ஜெயலலிதா கூட ‘உதய்’ மின் திட்டத்தில் கையெழுத்திடவில்லை. ஆனால், அதிலும் கையெழுத்துப் போட்டு மக்களை வாட்டி வதைக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜவுடன் கூட்டணி இல்லை என்ற பழனிசாமி, தற்போது கூட்டணி வைத்துள்ளார்.
பல மாநிலங்களில் பாஜவுடன் கூட்டணி வைத்தவர்கள் நிலை என்ன ஆனது என்று உங்களுக்கு தெரியும். பீகார் மாநிலத்தில் பல ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த நிதீஷ்குமார், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக மாறி விட்டார். எடப்பாடி பழனிசாமி அவர்களே, பார்த்து பத்திரமாக இருந்து கொள்ளுங்கள். தேர்தலுக்கு பிறகு ஏதாவது ஒரு மாநிலத்துக்கு உங்களை கவர்னராக அனுப்பி விடுவார்கள். தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராகச் செயல்படும் இந்தக் கூட்டணியை நாம் முறியடிக்க வேண்டும். இந்த தேர்தல் தமிழகத்தின் கீழடிக்கும், வட இந்தியாவில் ஆஎர்எஸ்எஸ் தலைமையகம் அமைந்துள்ள நாக்பூருக்கும் இடையிலான சித்தாந்த போர். இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.
