தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் பேசியதாவது:
தோழகிரிபட்டி கோவிந்தராஜ் – நீர்வளத் துறை வசம் உள்ள சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களை முழுவதுமாக வேளாண் பொறியியல் துறை வசம் ஒப்படைக்க வேண்டும். இதனால் எந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணியை சிறப்பாக செய்ய முடியும். மின்வாரியத்தில் தட்கல் மூலம் பணம் கட்டியவர்களுக்கு விரைவில் மின் இணைப்பை வழங்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கரும்பு விவசாயிகளுக்கு கடன் வழங்கவில்லை. இதனால் விதை கரும்புக்கு பணம் கொடுக்க முடியாமல், கரும்புக்கு உரம் வாங்காத நிலையில் விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே விரைந்து கரும்புக்கடன் வழங்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் எந்தவித பிணையும் இல்லாமல் ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்க வேண்டும். பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படாமல் உள்ள விவசாயிகளுக்கு உடன் அவர்களின் வங்கிக் கணக்கில் இழப்பீட்டு பணத்தை வரவு வைக்க வேண்டும்.
ஏ கே ஆர் ரவிச்சந்தர் : தஞ்சை மாவட்டத்தில் சம்பா தாளடி அறுவடை பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. பரிசோதனை பயிர் இழப்பீட்டிற்காக மகசூல் அளவை பரிசோதனை செய்வதை விவசாயிகள் மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகளை அழைத்து வெளிப்படை தன்மையோடு நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேர்தல் நடைமுறைக்கு முன்பே வங்கிக் கணக்கில் இழப்பீட்டு தொகையை வரவு வைக்க வேண்டும். வைக்கோல் கட்டும் இயந்திரத்தில் சணலுக்கு பதிலாக மாஞ்சா நூல் பயன்படுத்துவதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். திருவையாறு திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் இரவு பகலாக நடந்து வரும் மணல் கொள்ளையை தடுக்க கோட்டாட்சியர் பறக்கும் படை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரத்தூர் பக்த மு. பிரகலாதன்: வெண்ணாறு பிரிவு கச்சமங்கலம் தலைப்பு பிள்ளை வாய்க்கால் மூலம் ஒரத்தூர், நத்தமங்கலம், மேகளத்தூர் ஆகிய கிராமங்கள் பாசன வசதி பெறுகிறது. மழைக்காலங்களில் இப்பகுதிகளில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கினால் வடிவதற்கு வாய்ப்பு இல்லாமல் உள்ளது. இது குறித்து பல ஆண்டுகளாக தொடர்ந்து மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்பொழுதிலில் ஆய்வு மேற்கொண்டு வடிவால் வசதி செய்து தர வேண்டும்.
ஜீவக்குமார்: காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப, மேட்டூர் அணை நீர் திறப்பு மற்றும் மூடும் தேதிகளை (ஜூன் 12 மற்றும் ஜனவரி 28) அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. அவற்றின் விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறுகளில் மணல் கொள்ளை தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுக்க வேண்டும். வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகள் கடைசி நேரத்தில் பெயரளவுக்கு செய்யக்கூடாது. சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களை முன்கூட்டியே தூர்வாரவும், அந்தப் பணிகளை முறையாகக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 40 முதல் 50 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. சாலை வரி, மின்சாரக் கட்டணம் போன்ற காரணங்களைக் கூறி விவசாயிகளிடம் பணம் பறிக்கப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். உணவளிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்தும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
பெரமூர் அறிவழகன் – நெல் கொள்முதல் நிலையங்களில் பிற மாநில நெல் கொண்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்தத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மாற்று நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும். திருவையாறு தாலுக்கா பெரமூர் வைரவன் கோவிலில் இருந்து கல்லக்குடி கிராமம் வரை மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடக்கூர் பழனியப்பன் – ஒரத்தநாடு தாலுகா வடக்கூர் வடக்கு கிராமத்தில் உயர்நிலைப் பள்ளிக்கும்,,விவசாயிகள் பயன்பாட்டிற்கும் உள்ள பொதுப் பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கிராமத்தில் உள்ள கடகொம்பு, குமுலங்குழி,பாப்பன்குளம், மங்காரி குளம் உள்ளிட்ட குளங்களை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெள்ளம் பெரம்பூர் துரை.ரமேஷ் : தஞ்சாவூர் நீலகிரி ஊராட்சி கலைஞர் நகர் 4வது தெருவில் நீண்ட காலமாக 4 வீடுகளுக்கு குடிநீர் வருவதில்லை. பல முறை பலரிடம் மனு அளித்தும் பலனில்லை. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனே குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சாவூர் ஒன்றியம் இராயந்தூர் ஊராட்சி அய்யனார் குளத்தில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரையை அகற்றவேண்டும். திருவையாறு வட்டம் அலிசகுடி அய்யனார் ஏரியில் இடம்தெரியாத அளவில் ஏரி முழுவதையும் ஆகாயத்தாமரை படர்ந்து ஆக்கிரமித்து விட்டதால் மனிதர்கள், கால்நடைகள், விவசாய பயன்பாடுகள் என அனைத்தும் பாதிக்கப்படுகிறது ஆகாயத்தாமரையை அகற்றிடவும்,ஏரியை சூழ்ந்துள்ள கருவேலமரங்களையும் அப்புறப்படுத்தி ஏரியை தூய்மையாக தூர்வார வேண்டும்.

