Skip to content
Home » விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் திருச்சியில் தினம் ஒரு கூத்து

விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் திருச்சியில் தினம் ஒரு கூத்து

  • by Senthil

புதிய வேளாண் கொள்கைகளுக்கு எதிராக, டில்லியில் ஒரு வருடத்திற்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி கோரிக்கைகளை வென்றெடுத்தனர். அவர்களால் விவசாயிகளுக்கு பெருமை. அந்த விவசாய சங்கத்தை உலகமே உற்று நோக்கியது. ஆனால் திருச்சியில்  விவசாய சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பு  தினந்தோறும் கேலிகூத்து நடத்தி வருகிறது என பொதுமக்கள்  வெறுப்படைந்து உள்ளனர்.

திருச்சியில் கடந்த சில தினங்களாக  விவசாய சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது.  விளை பொருட்களுக்கு உரிய  விலை கிடைக்க வேண்டும், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்.  விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளுக்காக இந்த போராட்டம் நடத்துவதாக அதன் தலைவர் அறிவித்து உள்ளார்.

ஆனால் இந்த சங்கத்தின் போராட்டத்தை பொதுமக்கள்  சில காலம் வேடிக்கையாக பார்த்தனர். இவர்கள்  ஒரு பெண்ணை பாவாடை மட்டும் கட்டிக்கொண்டு அழைத்து வருவது,  சிலர் கோவணத்துடன் வருவது, சில நேரங்களில் மண்டை ஓடுகளுடன் வருவது போன்ற வேடிக்கை காட்டினர்.

திடீரென காவிரி ஆற்றில் இறங்கி குளியல் போடுவது, முக்கொம்பில் குளியல் போடுவது என போராட்டம் நடத்தினர்.   ஆற்றில் இறங்கியவர்கள் வெள்ளத்தில் அடித்து போய்விடக்கூடாது என போலீசாரும், தீயணைப்பு துறையினரும் இவர்களை தாங்கி  வெளியே கொண்டு வருவது  வாடிக்கையாகி விட்டது. சில பத்திரிகைகளும், இந்த வேடிக்கை போராட்டத்தை ஏனோ….. விளம்பரப்படுத்துகிறது.

ஆனால்  இந்த  கூட்டத்தை கண்டாலே  இப்போது பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.  எனவே இதுபோன்ற போராட்டங்களுக்கு  அனுமதி அளிக்க கூடாது என   திருச்சி மக்கள்  கோரிக்கை விடுத்து உள்ளனர். இவர்கள் போராட்டம் நடத்தி  விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. ஏதோ நன்மைக்காக இவர்கள் நலன் கருதி  இந்த கூத்து நடத்துகிறார்கள். இவர்கள் பின்னால், தினமும் 10 போலீசாரும், 10 தீயணைப்பு வீரர்களும் அலைய வேண்டுமா என போலீசாரும், தீயணைப்பு துறையினரும்   கோபத்துடன் கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!