தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் 50 பேர் அக்கட்சியிலிருந்து விலகி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் வரை திமுக – காங்கிரஸ் கூட்டணி நீடித்து வந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பின் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியிலிருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்தது. தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் விலகி திமுகவில் இணைந்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், பிரையண்ட் நகர் பகுதி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜா, விக்னேஷ், முருகேசன் உள்ளிட்ட 50 பேர் எஸ்பி ராஜன், சிஎஸ் முரளிதரன் ஆகியோர் ஏற்பாட்டில் திமுகவில் இணைந்தனர்.
இணைந்த அனைவரையும் வரவேற்ற வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன், “காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ள அனைவரும் இணைந்து ஒற்றுமையுடன் மக்கள் பணியாற்ற வேண்டும். தத்தமது பகுதிகளில் திமுக வளர்ச்சிக்கு உழைப்பதுடன், திமுக அரசின் சாதனைகளைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் திமுக மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, இலக்கிய அணி துணை அமைப்பாளர் பிக் அப் தனபால், சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், வட்டச்செயலாளர் பாலகுருசாமி, கவுன்சிலர் சந்திரபோஸ், வட்டப் பிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
