சென்னை தண்டையார்பேட்டை, வ.உ.சி. நகரை சேர்ந்த நரேஷ்குமார் (28), மீன் வெட்டும் வேலை செய்து வந்தார். இவர் மீது புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது.
நரேஷ்குமார் நேற்று முன்தினம் நள்ளிரவு அவரது வீட்டின் கதவை தட்டினார். அவரது தந்தை வெங்கடேசன் கதவை திறந்தபோது கழுத்து, இடுப்பு, மார்பில் படுகாயங்களுடன் இருந்த நரேஷ்குமார், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நரேஷ்குமாரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், நரேஷ்குமார் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நரேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், மர்ம நபர்கள் நரேஷ்குமாரை கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த அவர், வீட்டுக்கு வந்து ரத்த காயங்களுடன் கதவை தட்டியதும், பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவர், தந்தை கண் எதிரே உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து கொலையாளிகள் குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக சந்தேகத்தின்பேரில் நரேஷ்குமாரின் நண்பர்கள் 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
