திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் யூ.எஸ்.கருப்பையா முன்னிலை வகித்தார்.ஆலோசகர்கள் கே.எம்.பி.அப்துல் ஹக்கீம், ஏ. தங்கராஜ், எஸ்.பி. பாபு, ஒருங்கிணைப்பாளர்கள் வி.என். கண்ணதாசன், எஸ்.எம்.டி சபி முகமது, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் செயலாளர் என்.டி. கந்தன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: திருச்சி காந்தி மார்க்கெட் சம்பந்தமாக தமிழக சட்டமன்றத்தில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் இரண்டு, மூன்று கூட்டங்களில் காந்தி மார்க்கெட் தொடர்ந்து இங்கேயே இயங்கும் என்பதை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர்கள், சபாநாயகர், அமைச்சர்கள், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் கேள்விகள் கேட்டு, அதற்கு அமைச்சர் கே.என்.நேரு , காந்தி மார்க்கெட் 50 கோடி ரூபாய் செலவில் புரைமைக்கப்பட்டு, தொடர்ந்து இங்கேயே செயல்படும் என்று சட்டமன்றத்திலேயே உறுதிமொழி அளித்திருக்கும் நிலையில், நமது திருச்சி மாநகராட்சி மேயர் காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படும், இடையூறாக இருக்கிறது என்று அடிக்கடி பத்திரிகையில் பேட்டி கொடுத்து வருவதை எங்கள் கூட்டமைப்பின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூட்டமைப்பு நிர்வாகிகள் விரைவில் அமைச்சர், கலெக்டர், ஆணையர் ஆகியோரை நேரில் சந்தித்து திருச்சி காந்தி மார்க்கெட் நிரந்தர நிலைமை மற்றும் பஞ்சப்பூர் புதிய காய்கறி மார்க்கெட் யாருக்காக கட்டப்படுகிறது? என்பது குறித்து முழுமையாக விளக்கம் பெறவேண்டும்,
கடந்த 4.8. 2025 அன்று திருச்சி மாநகராட்சி மண்டலம் – 2 ல் உதவி ஆணையர் தலைமையில் காந்தி மார்க்கெட் வியாபாரிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆடி -28 முடிந்து மறுநாளே சுமார் 3 கோடியே 65 லட்சம் செலவில் காந்தி மார்க்கெட் முழுவதும் சாலைகள் புதுப்பித்தல், சாக்கடைகள் தூர்வாருவது உள்ளிட்ட பணிகள் தொடங்கும் என வாக்குறுதி அளித்தார். இத்தனை நாட்கள் கடந்தும் எவ்வித பணியும் தொடங்கவில்லை. பலமுறை இது சம்பந்தமாக புகார் அளித்தும், கேள்வி கேட்டும் எந்தவிதமான பதிலும் இல்லை. இதையும் கண்டிப்பதோடு, இரண்டு நாட்களில் இப்பணிகளை தொடர்ந்தும், விரைவில் சுமார் மூன்று மாத காலத்திற்குள் பராமரிப்பு பணிகளை முடித்துக் கொடுத்து, காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தொடர் சிரமத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன