சென்னை அருகே ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர், சாமுண்டீஸ்வரி நகர், 2வது தெருவில் அப்பகுதியை சேர்ந்த சங்கர் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. அவரது வீட்டின் 3 போர்ஷன்களிலும் தனித்தனியே 3 குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். இதில் ஒரு போர்ஷனில் முருகனின் குடும்பத்தினரும், மற்றொரு போர்ஷனில் வைரமுத்து, அவரது மனைவி செல்வி, மகன் பிரதீப் ஆகியோரும், 3வது போர்ஷனில் சஞ்சீவ்குமார், மனைவி சோனியா, மகள் கிருத்திகா, மகன் தீரன், மாமியார் சித்ரா, மைத்துனி சுதா ஆகிய 6 பேரும் வசித்துள்ளனர்.Urban Transit
இந்நிலையில், கடந்த 15ம் தேதி அதிகாலை வைரமுத்து என்பவரின் வீட்டில் சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறிதில், அந்த 3 போர்ஷன்கள் அடங்கிய வீடு முழுவதும் இடிந்து விழுந்தது. இதில் சஞ்சீவ்குமாரின் மகள் கிருத்திகா, மகன் தீரன் ஆகிய 2 குழந்தைகளுடன் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக பலியாகிவிட்டனர். மேலும் சஞ்சீவ்குமார், அவரது மனைவி சோனியா, மாமியார் சித்ரா உள்பட 7 பேர் பலத்த தீக்காயங்களுடன் செங்கல்பட்டு மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.
இதைத் தொடர்ந்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த 23ம் தேதி 75 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த வைரமுத்து (45) என்பவர் பலியானார். இந்நிலையில், அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11 மணியளவில் வைரமுத்துவின் மனைவி செல்வி (40), மகன் பிரதீப் (7) ஆகிய 2 பேரும் பரிதாபமாக பலியாகிவிட்டனர். இதுகுறித்து மருத்துவமனை தகவலின்பேரில் தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அச்சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் 2 பேரின் சடலங்களையும், அவர்களின் சொந்த ஊரான ராணிப்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நாவலூரில் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இதற்கிடையே, தற்போது தேர்தல் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளதால், காஸ் சிலிண்டர் வெடித்ததில் இறந்த 5 பேரின் குடும்பத்தினருக்கும் இதுவரை அரசினால் எவ்வித நிவாரண உதவிகளும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விதிவிலக்கு அளித்து, இறந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

