அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், கூவத்தூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர், சின்னப்பராஜ் மகன் ஜான் பிரிட்டோ(24),இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் செய்ததாக ஆண்டிமடம் காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த 5.9.2023 ம் தேதி ஜான் பிரிட்டோ கைது செய்யப்பட்டு ஜெயங்கொண்டம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவ்வழக்கினை புலன் விசாரணை செய்ய ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லெ.சுமதி நியமிக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில் ஜான் பிரிட்டோ மீது குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கக்கோரி ஆண்டிமடம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் நா.முத்துக்குமார் பரிந்துரையின் அடிப்படையிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லாவின் மேல் பரிந்துரையை ஏற்றும், ஜான் பிரிட்டோ மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி தடுப்புக்காவலில் அடைக்க கலெக்டர் ஆனி மேரி ஆணையிட்டார். அதன் படி நேற்று ஜான் பிரிட்டோ குண்டர் சட்டத்தின்படி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.