நாளை(பிப்14) காதலர் தினம். வழக்கமாக காதலர்கள் தங்கள் காதலிகளுக்கு இந்த தினத்தில் பரிசுகள் வழங்கி காதலை வளர்க்க, காதலியின் பேரன்பை, அல்லது பிரதியுபகாரத்தை பெற முயல்வார்கள். அப்படி நாளை காதலர்கள் பரிசுகள் கொடுத்தால், காதலிகள் உடனே வாங்கி விட வேண்டாம்.
இந்த பரிசு பொருளை வாங்க உன்னிடம் பணம் எப்படி வந்தது, இந்த பணத்தை நீ சம்பாதித்தாயா, அல்லது உன் பெற்றோர் பணத்தை திருடி வந்தாயா என கேட்டு பரிசினை பெறுங்கள்.
விழுப்புரத்தில் அரவிந்த்குமார் என்ற கல்லூரி மாணவர், தனது காதலிக்கு பரிசுகொடுக்க பணம் இல்லாததால், பைக்கில் சென்று கிராமபுறத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை திருடி தனது நண்பர் மோகன் என்பவருடன் ஆட்டை விற்க கொண்டு சென்றபோது பொதுமக்களிடம் சிக்கிகொண்டனர். பின்னர் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் காதலிக்கு நாளை பரிசு கொடுக்க ஆட்டை திருடியதாக கூறி உள்ளார் மாணவர் அரவிந்த்குமார்.
அதன் பேரில் அவரையும், நண்பரையும் போலீசார் கைது செய்தனர். ஆட்டை விற்ற பணத்தில் வாங்கிய பரிசினை காதலி வாங்கியிருந்தால் அவரும் குற்றவழக்கில் சேர்க்கப்பட்டிருப்பார். எனவே காதலர்களிடம் பரிசு வாங்கும் காதலிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.