தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் கட்சிகள் அனைத்தும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக்கொண்டு அதற்கான வேலைகளை தொடங்கியிருக்கிறது. இப்படியான சூழலில் பாமக உட்கட்சி விவகாரம் என்பது எப்போது முடிவுக்கு வரும் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்று தொண்டர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
ஏனென்றால், அன்புமணி – ராமதாஸ் இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இருவரும் சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினாலும் இன்னும் சமாதானம் ஆனதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது வெளியாகவில்லை. இது குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கும் ராமதாஸ் தெளிவான பதிலை சொல்லாமல் இருந்து வருகிறார்.
அதைப்போல, பாமக அதிமுக – பாஜக கூட்டணியில் இணையவுள்ளதா என்கிற கேள்விக்கும் தெளிவான பதில் இல்லாமல் நல்ல செய்தி விரைவில் வரும் என்றே கூறி வருகிறார். அப்படி தான் இன்று சென்னை வந்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் கோட்டூர்புரத்தில் காரில் இருந்தபடியே செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்ததுடன் இன்று செய்தி எதுவும் இல்லை என தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர் ” இப்போது இங்கு சொல்வதற்கு புதிய செய்தி ஒன்றும் இல்லை. வரும் வியாழக்கிழமை தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கிறேன். அப்போது நல்ல செய்தி வரும்” என என்ன செய்தி என்று சொல்லாமல் டிவிஸ்ட் வைத்தார். அதனை தொடர்ந்து நேற்று மதுரையில் நடந்த பாஜக கூட்டத்தில் தமிழ்நாட்டில் அடுத்த தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும் என்று அமித் ஷா கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.
அந்த கேள்விக்கு பதில் அளித்த ராமதாஸ் “அதில் என்ன சந்தேகம், கண்டிப்பாக வரும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும்’ என்று பதிலளித்தார். வரும் வியாழக்கிழமை கூட்டணி குறித்த செய்தியை அவர் சொல்லப்போகிறாராரா? அல்லது அன்புமணியுடன் பிரச்சினை முடிவு குறித்து பேசப்போகிறாரா? என பாமக தொண்டர்கள் ஆர்வத்துடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.