எதிர்வரும் திங்கட்கிழமை (ஜன.15) அன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் சென்று பொங்கல் கொண்டாட விரும்புவார்கள் என்பதால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று முதல் அதிக அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் 6 இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதிக்கும் செல்ல தனித்தனி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் புறப்பட்டுச் செல்கின்றன.
நேற்று (வெள்ளிக்கிழமை) வாரத்தின் கடைசி வேலை நாள் என்பதால் அதை முடித்துக்கொண்டு அன்று மாலையே அதிக அளவில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். அவர்களில் முன்னதாகவே முன்பதிவு செய்த பயணிகள் சிரமமின்றி அவர்களுடைய ஊருக்குச் செல்லும் பேருந்துகள் செல்லும் இடத்திற்கு சென்று புறப்பட்டனர். சிறப்பு பேருந்துகளில் பெரும்பாலான பயணிகள் முன்பதிவு செய்து புறப்பட்டனர்.
முன்பதிவு செய்த மக்களுடன், முன்பதிவு செய்யாத மக்கள் அதிக அளவில் பேருந்து நிலையத்தில் கூடினர். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வசதிக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் விடப்பட்டன. சென்னையில் இருந்து அதிக அளவில் பேருந்து புறப்பட்டுச் சென்றதால் சென்னை- திருச்சி ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பேருந்துகள் ஊர்ந்த வண்ணம் சென்றன.
நேற்று மட்டும் வழக்கமான பேருந்துகளுடன் 1,260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மொத்தம் 3,946 பேருந்துகள் மூலம் 2 லட்சத்து 17 ஆயிரத்து 30 பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் அதிக அளவிலான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணிப்பார்கள் என்பதால் அதற்கேற்ப போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் செல்ல அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 310 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
இது தவிர ஆம்னி பேருந்துகள் தனியாக இயக்கப்பட்டு அதிலும் பல ஆயிரம் பேர் பயணிக்கின்றனர். வழக்கமான ரயில்களை விட கூடுதல் ரயில்களை சிறப்பு ரயில்களாக தெற்கு ரயில்வே இயக்கி வருவதால் அதிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் பயணம் செய்து வருகின்றனர்.