Skip to content
Home » துப்பாக்கி வெடித்து முன்னாள் ராணுவ வீரர் பலி….

துப்பாக்கி வெடித்து முன்னாள் ராணுவ வீரர் பலி….

மதுரை பெத்தானியபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். 23 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தற்போது தனது சொந்த ஊரில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் வங்கி ஒன்றில் பாதுகாவலராக பணிக்குச் சேர்ந்தார்.

இவர் ராணுவ வீரர் என்பதாலும், வங்கி பாதுகாப்புப் பணியில் இருந்ததாலும், உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாக வங்கி ஏடிஎம்களில் பணம் செலுத்தும் வாகனத்துக்குப் பாதுகாவலாகச் சென்று வந்தார்.

இந்த நிலையில், அவர் கடந்த 20 நாட்களாக பணிக்குச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ராஜேந்திரனிடம் உள்ள துப்பாக்கியை, காவல் நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கி
இதையடுத்து, இன்று காலை தனது வீட்டு மொட்டை மாடியில், துப்பாக்கியை அவர் சுத்தப்படுத்தியுள்ளார். அப்போது, துப்பாக்கி தவறுதலாகச் சுட்டதாகத் தெரிகிறது. இதில் அவர் உடலில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது குடும்பத்தினர், உடனடியாக இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீஸார், ராஜேந்திரனின் சடலத்தை மீட்டு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், ராஜேந்திரன் தவறுதலாகச் சுட்டுக்கொண்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவ அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!