தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு 10 தினங்களுக்கு முன்னதாகவே தொடங்கி விட்டது. இதன் காரணமாக கேரளாவிலும், தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இன்றும் நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா காட்சி முனை, பைன்பாரஸ்ட், அவலாஞ்சி, பைக்காரா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் முன்கூட்டியே மூடப்பட்டன. .
அதி கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள், ஊட்டி படகு இல்லம் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 353 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:
அப்பர் பவானி 298, எமரால்டு 182, கூடலூர் 153, சேரங்கோடு 139, பந்தலூர் 137, குந்தா 115, பாடந்தொரை 105, கிளன்மார்கன் 105, செருமுள்ளி 101, ஓவேலி 89, நடுவட்டம் 80, கிண்ணக்கொரை 72, ஊட்டி 71.1, தேவாலா 63, கெத்தை 45, மசினகுடி 36, பர்லியாறு 35, கோடநாடு 32, குன்னூர் 30, கல்லட்டி 20, கோத்தகிரி 16, கீழ் கோத்தகிரி 8.
மழை காரணமாக ஊட்டி வந்த சுற்றுலா பயணிகள் விடுதிகளில் முடங்கி உள்ளனர்.