Skip to content
Home » டூவீலரில் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மட் கட்டாயம்…. கோவையில் இன்று அமல்

டூவீலரில் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மட் கட்டாயம்…. கோவையில் இன்று அமல்

  • by Senthil

கோவை மாநகரில்  போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் விபத்துக்களும் அதிகரிக்கிறது.  இருசக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் குறித்து  மாநகர போலீசார் விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் உயிரிழக்கும் சதவீதம் அதிகமாக இருந்தது. இதனை தடுக்கவும், 100 சதவீதம் விபத்துக்களை தடுக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க மாநகர போலீசார் முடிவு செய்தனர்.

அதன்படி கோவை மாநகரில் இன்று முதல் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருப்பவர்களும், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து இன்று ஒருசிலர் போலீசாரின் உத்தரவை கடைபிடித்து, மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்தவர்களும் ஹெல்மெட் அணிந்திருந்தனர். இந்த திட்டம் அமலானதை அடுத்து முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாநகர போலீசார் முக்கியமான சாலைகளில், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலைகளில் வந்த மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்தவர்கள் ஹெல்மெட் அணிந்துள்ளனரா என கண்காணித்தனர்.

அப்படி அணியவில்லை என்றால், அந்த வாகன ஓட்டிகளை பிடித்து எச்சரிக்கை விடுத்தனர். மேலும் அவர்களை போக்குவரத்து பூங்காவுக்கு அழைத்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கோவை மாநகரில் இந்த திட்டம் இன்று அமலுக்கு வந்தாலும், ஒரு சிலர் மட்டுமே இதனை கடைபிடித்தனர். ஆனால் மாநகரின் பெரும்பாலான இடங்களில் அதனை யாரும் கடைபிடித்த மாதிரி தெரியவில்லை. வழக்கம் போலவே மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றனர்.

ஒரு சில இடங்களில் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களே ஹெல்மெட் அணியாமல் செல்வதையும் காணமுடிந்தது. விபத்துக்களை தடுக்கும் நோக்கில் கோவை மாநகரில் இன்று முதல் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருப்பவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை வாகன ஓட்டிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும். இது தொடர்பாக வாகன தணிக்கையிலும் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். ஹெல்மெட் அணியவில்லை என்றால் மோட்டார் வாகன சட்ட விதிகளின் படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களுக்கு ஒருவார காலத்துக்கு போக்குவரத்து பூங்காவில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்படும்.என்று போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!