இந்திய மண்ணில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு இடமில்லை;இந்தியா கூட்டணி 400, இடங்களுக்கு மேல் கைப்பற்றும்; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை ஆருடம்;
நாகை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொளுத்தும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க, பல்வேறு கட்சி சார்பில் பல இடங்களில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு பானங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாகையில் இன்று நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் அபிராமி அம்மன் திருவாசல் அருகே நீர், மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, அங்கு பொதுமக்களுக்கு
தாகம் தீர்க்கும் தர்பூசணி, வெள்ளரி மற்றும் நீர், மோர் பானங்களை வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை,
இந்திய மண்ணில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு இடமில்லை என்றும், தமிழகத்தில் பாஜக வேண்டாம் என்ற கோஷம் எழுந்தது போல், தற்போது வட மாநிலங்களிலும் தேர்தல் மூலம் எதிரொலிக்கிறது. இந்தியா கூட்டணி 400, இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என ஆருடம் தெரிவித்தார். சோதனை என்ற பெயரில் பாஜக அதிகாரிகளை அனுப்பி அச்சுறுத்தினாலும் இந்தியா கூட்டணி தலைவர்கள் அஞ்ச மாட்டார்கள். அச்சமும், மடமையும் ஏற்பட்டு இருப்பது பாஜக தலைவர்களுக்குதான் என பேசினார். மேலும் தமிழகத்தில் பாஜக எந்த தொகுதியையும் பிடிக்க முடியாது என்றும் அண்ணாமலை வேண்டுமென்றால் ஆட்டுக்குட்டியை பிடிக்கலாம் என நக்கல் அடித்தார்.