அமெரிக்க அதிபர் டிரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினர்.
அப்போது ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால் இந்து பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அதிபர் டொனால்டு டிரம்பை வாஷிங்டனில் இன்று சந்தித்துப் பேசுகிறார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லியென், ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ், பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் மெலோனி ஆகியோரும் ஜெலன்ஸ்கியோடு இணைந்து அதிபர் டிரம்பை சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது.
உக்ரைனின் டோன்ஸ்க் பகுதியில் சுமார் 70 சதவீத நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. அந்த பிராந்தியம் முழுவதையும் ரஷ்யா சொந்தம் கொண்டாடுகிறது. போரை நிறுத்த டோன்ஸ்க் பகுதியை முழுமையாக ரஷ்யாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அந்த நாட்டு அதிபர் புதின் கூறியுள்ளார். இதற்கு ஈடாக ரஷ்யா வசம் உள்ள மிகச் சிறிய பகுதியை உக்ரைனுக்கு வழங்க புதின் முன்வந்துள்ளார்.
ராணுவ ரீதியாக டோன்ஸ்க் பகுதி மிகவும் முக்கியத்தும் வாய்ந்தது. இந்த பகுதியில் அரிய வகை தனிமங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் நிறைந்துள்ளன. எனவே டோன்ஸ்க் பகுதியை விட்டுக் கொடுக்க முடியாது. உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் ஓரணியில் உள்ளன. எனவே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியோடு இணைந்து ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்துப் பேச உள்ளனர். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக்கூடாது என்று அதிபர் புதின் நிபந்தனை விதித்துள்ளார். இதுவும் ஏற்றுக் கொள்ள முடியாத நிபந்தனை. இதுதொடர்பாக அதிபர்டிரம்புடன் விரிவாக விவாதிக்கப்படும். என்று உக்ரைன் தகவல்கள் தெரிவிக்கிறது.