சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் மாணவிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாணவர்கள் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய கலாசார அமைச்சகத்திற்கு மின்னஞ்சல் மூலம் புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில், பாலியல் தொல்லை அளித்துவரும் பேராசிரியர் உள்ளிட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வரை போராட்டம் நடைபெறும் எனவும் மாணவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.