கரூர் மாவட்டம் ஆண்டான்கோவில் கிழக்கு, ரெயின்போ நகர் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் புதிய கட்டிவரும் வீட்டில்கட்டுமான பணிக்கும், அருகாமையில் தனபால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அரசு அனுமதியுமின்றி சட்டவிரோதமாக பெருமளவில் ஆற்று மணல் கடத்தி வரப்பட்டு, அங்குள்ள காலி இடத்தில் கொட்டி வைக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு புகார்கள் வந்தன.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், அங்கு கொட்டி வைக்கப்பட்டிருந்த மணலை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் இறங்கினர்.
அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர், அதிகாரிகளை முற்றுகையிட்டு பணியைச் செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து, அரசு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பணி செய்ய விடாமல் மிரட்டியதாக அதிமுக நிர்வாகி ஜெகன், அருண்,முத்துக்குமார் உள்ளிட்ட அடையாளம் தெரிந்த 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

