Skip to content
Home » கரூரில் கிரசர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்….வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம்..

கரூரில் கிரசர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்….வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம்..

தமிழ்நாட்டில் உள்ள எந்த கல்குவாரியிலும் கம்ப்ரஸர் லாரிகள் இன்று முதல் ஓடாது என திருச்சியில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுத்து தீர்மானம் வெளியிட்டனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தின் பின்னணியாக, கரூர் மாவட்டத்தில் குவாரி மற்றும் கிரசர் தொழிலில் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் பணம் கேட்டு மிரட்டுவது மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனர் தமிழகத்தில் உள்ள அனைத்து குவாரிகளையும் முடக்கும் நோக்கத்தோடு, பல இடையூறுகள் செய்து வருவதாகவும், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளி மாவட்ட அதிகாரிகளைக் கொண்டு ஆய்வில் ஈடுபட்டு

அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நடவடிக்கைகள் காரணமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக 100-க்கும் மேற்பட்ட குவாரி உரிமையாளர்கள் கடந்த 22-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக கட்டுமான பொருட்கள் தட்டுபாடு ஏற்பட்டு, கட்டுமான தொழில் அனைத்தும் பாதித்துள்ளது. இதை சார்ந்த தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இன்றி வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு கட்டுமான பொருட்கள் தடை இன்றி கிடைக்க ஏற்பாடு செய்து தரவேண்டும் என கடந்த 24 ஆம் தேதி பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா கரூர் மையத்தின் தலைவர் ராமசாமி கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

மேலும், கரூரில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நடைபெற்று வரும் வேலைநிறுத்தம் காரணமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய பல கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!