தமிழகத்தில் கவர்னராக உள்ள ரவி, பொறுப்பேற்று 2 வருடங்கள் ஆகிறது. இவர் பதவியேற்ற நாள் முதல் தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாகவும், அரசை முடக்க பல்வேறு வேலைகளை செய்து வருவதாகவும் அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வருகிறார்கள். திமுக அரசுக்கு எதிராக அரசியல் செய்வதையே முழுநேர பணியாக கொண்டு செயல்படுகிறார் என முதல்வரும் கண்டித்து உள்ளார்.
இந்த நிலையில் தமிழக அரசின் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டுள்ளார், மசோதாக்கள் மீது முடிவு எடுக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இதுபோல கேரள கவர்னர் ஆரீப் முகமது கானும், 8 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கேரள அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இரண்டு வழக்குகளும் ஒன்றாக எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.