தமிழக பாஜக ஓபிசி மாநில செயலாளராக இருந்த கே.ஆர்.வெங்கடேஷ் கட்சி பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூர், பி.டி.மூர்த்தி நகர், வீரவாஞ்சி தெருவைச் சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேஷ். இவர் பாஜகவில் ஓபிசி அணி மாநில செயலாளராக இருந்தார். இவர் மீது ஆந்திரா, தெலங்கானாவில் செம்மரம் கடத்தல் வழக்கு, பண மோசடி, துப்பாக்கி வைத்து மிரட்டுதல் உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.பிரபல எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் டீலராக உள்ள சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ரூ.48 லட்சம் ஏமாற்றியதாக ஆவடி காவல் ஆணையரகத்தில் வெங்கடேஷ் மீது புகார் அளித்தார். இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் வெங்கடேஷை நேற்று கைது செய்தனர்.
இந்நிலையில் தமிழக பாஜக ஓபிசி மாநில செயலாளராக இருந்த கே.ஆர்.வெங்கடேஷ் கட்சி பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.