கோவில்பட்டியில் புனரமைக்கப்பட்ட காமராஜர் சிலையை நடிகரும் தொழிலதிபருமான லெஜெண்ட் சரவணன் திறந்து வைத்தார்.
பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் பிரதான சாலையில் புனரமைக்கப்பட்ட காமராஜர் சிலை திறப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. இவ்விழாவில் திரைப்பட நடிகரும், லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளருமான லெஜெண்ட் சரவணன் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சிலையையும், கல்வெட்டையும் திறந்து வைத்துக் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ், துணைத் தலைவர் செல்வராஜ், செயலாளர் ஜெயபாலன், பொருளாளர் சுரேஷ்குமார், பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன், நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜா, பனங்காட்டு படை கட்சியின் நிறுவனர் ராக்கெட் ராஜா, சென்னை அயனாவரம் நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், தொழிலதிபர்கள் சக்திவேல், ஆனந்தராஜ், லெஜெண்ட் சரவணன் தலைமை நற்பணி மன்றத்தின் அகில இந்திய தலைவர் முத்துதுரை, நாடார் உறவின்முறை சங்கத்தைச் சார்ந்த பள்ளி, கல்லூரி கமிட்டி நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாலை 8 மணி அளவில் அன்னதானம் மற்றும் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றன. தொடர்ந்து நடந்த விழாவில், கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கப் பள்ளிகளில் படித்து 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு லெஜெண்ட் சரவணன் பரிசுகளை வழங்கினார். அத்துடன், காமராஜர் பிறந்த நாள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
