Skip to content

போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்” – கவிஞர் வைரமுத்து

‘போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’ என இஸ்ரேல் – ஈரான் போர் குறித்து கவிஞர் வைரமுத்து  வருத்தம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரில் இருதரப்பிலும்  ஏராளமான உயிரிழப்புகள்,  பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தொடர் தாக்குதலால்  மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஆரம்பத்திலிருந்தே இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்துவரும் அமெரிக்கா, ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தியது மேலும் பதற்றத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது. ஈரானில் ஃபார்டவுவ் , நடான்ஸ் மற்றும் இஸ்பாஹான் ஆகிய மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பது ஒட்டுமொத்த உலகையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.  இது உலகளாவிய போருக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் போர் குறித்து கவிஞர் வைரமுத்து தனது கவிதை பாணியில் வருத்தம் தெரிவித்துள்ளார்.  மேலும், “அணுகுண்டு முட்டையிடும்

அலுமினியப் பறவைகள் அதனதன் கூடுகளுக்குத் திரும்பட்டும்” என்று போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவில்,

 

“உலகின் தலையில்
மெல்லிய இழையில்
ஆடிக்கொண்டிருக்கிறது
அணுகுண்டு

“வக்கிர மனங்களால்
உக்கிரமாகுமோ யுத்தம்”
கலங்குகிறது உலகு

ஈரானின்
அணுசக்தித் தளங்களில்
டொமாஹக் ஏவுகணைகள்வீசி
அவசரப்பட்டுவிட்டது
அமெரிக்கா

வல்லரசுகள்
நல்லரசுகள் ஆகாவிடில்
புல்லரசு ஆகிவிடும்
பூமி

தான் கட்டமைத்த நாகரிகத்தைத்
தானே அழிப்பதன்றி
இதுவரை போர்கள்
என்ன செய்தன?

போரிடும் உலகத்தை
வேரொடு சாய்ப்போம்

அணுகுண்டு முட்டையிடும்
அலுமினியப் பறவைகள்
அதனதன் கூடுகளுக்குத்
திரும்பட்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

error: Content is protected !!