திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாப்பாய் மேம்பாலத்தில் முன்னாள் சென்ற லாரி மீது பின்னால் சென்ற ஐயப்ப பக்தர்கள் வேன் மோதிய விபத்தில் வேன் டிரைவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா கொம்மேடு இருளர் தெருவைச் சேர்ந்தவர் 23 வயதான அய்யப்பன். இவர் லாரியில் ஜல்லிக்கற்களை ஏற்றிக் கொண்டு திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அதேபோல் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி மானியம் ஆடூர் பகுதியைச் சேர்ந்தவர் 31 வயதான முகமது யாசின். இவர் ஐயப்ப பக்தர்களை ஏற்றிக்கொண்டு திருச்சி சிதம்பரம் தேசிய
நெடுஞ்சாலையில் லாரியின் பின்னால் காட்டுமன்னார்குடி செல்வதற்காக சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் தாப்பாய் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற லாரியின் மீது எதிர்பாராதமாக பின்னால் சென்ற வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேன் டிரைவர் முகமது யாசின் மற்றும் ஐயப்ப பக்தர்கள் 35 வயதான மணிகண்டன், 56 வயதான மோகன், 30 வயதான அரவிந்த்,10 வயதான லோகேஷ், 15 வயதான கிஷோர், ராஜா, ரங்கநாதன் என 8 பேர் விபத்தில் காயம் அடைந்தனர். விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இந்த விபத்து குறித்து கல்லக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.