மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலர் அல்லவோ
என்ற பாடல் வரிகளில், மல்லிகைப்பூ மணத்தால் மன்னனை மயக்கும் என்று கவிஞர் வாலி கூறினார். ஆனால் இன்று விலையை கேட்டாலே மயக்கம் வரும் அளவுக்கு விலை உயர்ந்து உள்ளது. ஆனாலும் தமிழர் பண்டிகையின் சிறப்பால் மல்லிகையும் இன்று உயர்ந்து நிற்கிறது என்று பெருமை பட்டுக்கொள்ளவும் செய்யலாம். தமிழகம் முழுவதும் இன்று பூக்களின் விலை உயர்ந்தே காணப்பட்டது.
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் தென்மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் வரவழைக்கப்பட்டு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், பெங்கலை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.3,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மதுரை மல்லி இன்று ஒரே நாளில் கிலோவுக்கு 2 ஆயிரம் அதிரடியாக உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ கிலோ 3,000 ரூபாய்க்கும், பிச்சி மற்றும் முல்லை பூக்கள் கிலோ 2,000 ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி கிலோ 2,000 ரூபாய்க்கும், சம்பங்கி மற்றும் செவ்வந்தி பூக்கள் கிலோ 250 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் கிலோ ரூ.300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி பூக்களின் விலை உயர்ந்த போதிலும் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் வாங்க மக்கள் குவிந்துள்ளனர்.17ம் தேதி பூக்கள் விலை இதே நிலையில் தான் நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
திருச்சி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ 2 ஆயிரத்துக்கு இன்று விற்கப்பட்டது. பூக்கள் வந்தவுடன் டிமாண்டுடன் விற்று தீர்ந்தது. இப்போது மல்லிகைப்பூ இருப்பு இல்லாத அளவுக்கு விற்று தீர்ந்து விட்டது. நாளை விலை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என வியாபாரிகள் கூறினார். பிச்சிப்பூ, முல்லை, கனகாம்பரம் போன்ற பூக்களும் தலா 2 ஆயிரம் என்ற விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. புதுக்கோட்டை பூ மார்க்கெட்டில் இன்று அதிகபட்சமாக கிலோ 4 ஆயிரத்துக்கு மல்லிகை பூக்கள் விற்பனையானது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்சந்தையிலும் இன்று அனைத்து பூக்களும் விலை உயர்வாககே இருந்தது.