KRG Studios தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி நடிகர் ஜெய் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள”டெக்ஸ்லா” திரைப்படத்தின் பூஜை இன்று சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் லதா ரஜினிகாந்த், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர்கள் பாலா, சமுத்திரக்கனி , நடன இயக்குனர் சாண்டி, இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் இந்த திரைப்படம் வெற்றி பெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த லதா ரஜினிகாந்த், “இந்த புதிய திரைப்பட விழாவில் கலந்து கொண்டது தனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் சினிமாவில் புதுவிதமான கதைகள் வருவது ஒரு ஆரோக்கியமான நிகழ்வு. திரைப்படம் வெற்றிபெற படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்கள். ரஜினி கமல் இணைந்து நடிப்பது மிகவும் சிறப்பான தருணம், அடுத்த தலைமுறைக்கு இது உத்வேகத்தை அளிக்கும். இந்த நிகழ்வு ஒரு மைல்கல்லாக இருக்கும், இருவரை நினைத்து பெருமைப்படுகிறேன். இசையமைப்பாளர் அனிருத் கதாநாயகனாக நடிப்பது என்பது அவரது விருப்பம். அவர் பன்முகத் திறமைகளோடு உள்ள நபர். ஜெய்லர் 2 திரைப்படத்திற்காக அனைவரையும் போல் தானும் காத்துக் கொண்டுள்ளேன். எனது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்தை நினைத்து பெருமைப்படுக்றேன். வித் லவ் திரைப்படம் வெற்றிகரமாகியுள்ளது. அவர் முதலில் இயக்கிய கோச்சடையான் திரைப்படமே மிகப்பெரிய முயற்சி. அன்று அதற்கான திரையரங்க தொழில்நுட்பங்கள் இல்லாமல் போனாலும் சமீபத்தில் நடைபெற்ற ஏஐ மாநாட்டில் கோச்சடையான் காட்சிகளை திரையிடபட்டது. கோச்சடையான் திரைப்படம் விரைவில் ரிலீஸ் செய்யப்படும்” என்றார்.
