Skip to content
Home » 9 டிஎம்சி தண்ணீர்… உடனே திறக்க உத்தரவிடுங்கள்…. மத்தியமந்திரியிடம் துரைமுருகன் கோரிக்கை

9 டிஎம்சி தண்ணீர்… உடனே திறக்க உத்தரவிடுங்கள்…. மத்தியமந்திரியிடம் துரைமுருகன் கோரிக்கை

மேகதாதுவில்  புதிய  அணை கட்ட கர்நாடகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேகதாது அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறி இருந்தார். ஆனாலும் அதற்கான நடவடிக்கைகளில் கர்நாடகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் கர்நாடகா துணை முதல்-மந்திரி சிவக்குமார் அண்மையில் கூறுகையில் கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தமிழக நீர்வளத்துறை முதன்மை தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்துக்கும், மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கும் நேற்று முன்தினம் ஒருகடிதம் எழுதி இருந்தார். அதில் ஜூன், ஜூலை மாதத்துக்கு காவிரியில் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடகா முறைப்படி தரவில்லை. ஜூன் மாதத்திற்கு 9.19 டி.எம்.சி.யும், ஜூலை மாதத்திற்கு 34 டி.எம்.சி. தண்ணீரும் வழங்கப்பட வேண்டும். இதை தமிழகத்திற்கு திறந்துவிட கர்நாடக அரசை அறிவுறுத்த வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகனும்,  சந்தீப் சக்சேனாவும் டில்லியில் இன்று மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து பேசினர். சுப்ரீம் கோர்ட்டு காவிரி ஆணைய உத்தரவுபடி காவிரியில் முறைப்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தினார்கள். கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். அங்கு அணை கட்ட எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது என்றும் வலியுறுத்தினார்கள். இது தொடர்பான கோரிக்கை மனுவையும் மத்திய மந்திரியிடம் அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். 

அதைத்தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: இன்றைய தேதி வரை கா்நாடகம் 12 டிஎம்சி தண்ணீர் தந்திருக்க வேண்டும்.  ஆனால் 2.9 டிஎம்சி தான் தந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய 9 டிஎம்சி தண்ணீரை வழங்கவில்லை. மாத வாரியாக தமிழ்நாட்டிற்கான தண்ணீரை வழங்க, கர்நாடக அரசை அறிவுறுத்த கோரிக்கை விடுத்துள்ளோம். காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை என்றால், டெல்டாவில் உள்ள பயிர்கள் எல்லாம்  காய்ந்து போய்விடும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கமாட்டோம். மேகதாதுவில் அணை கட்ட விட மாட்டோம். தென்பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு தெளிவான விளக்கம் அளித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!