Skip to content
Home » அமைச்சர் பொன்முடி வழக்கு… தானாக முன்வந்து விசாரிக்கும் ஐகோர்ட்

அமைச்சர் பொன்முடி வழக்கு… தானாக முன்வந்து விசாரிக்கும் ஐகோர்ட்

1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியில் இருந்த போது, போக்குவரத்து துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 1 கோடியே 36 லட்சத்திற்கு சொத்து சேர்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. அவரது மனைவி விசாலாட்சி மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. பிறகு அந்த வழக்கு விசாரணை வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதில் 172 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, வாதங்கள் நிறைவடைந்தது.

கடந்த ஜூன் மாதம் 28-ந்தேதி நீதிபதி வசந்த லீலா இந்த வழக்கில் தீர்ப்பு அளித்தார். அப்போது அவர் பொன்முடி, அவரது மனைவி இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் போலீசார் தாக்கல் செய்யாததால் வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் இதுவரை சென்னை ஐகோர்ட்டில், மேல்முறையீடு செய்யப்படவில்லை. இந்த நிலையில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை தற்போது ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். அமைச்சர் பொன்முடி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் வேலூர் கோர்ட்டு தீர்ப்பில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று கருதி சென்னை ஐகோர்ட்டு தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து உள்ளது. இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று 124-வது வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!