தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘ஓம்’ என்ற திரைப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனையடுத்தே இறுதி கட்டப் படப்பிடிப்பு பணிகள் திருவண்ணாமலை நகரில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயில் பின்புறம் உள்ள மாடவீதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தெருக்களில் ‘ஓம்’ திரைப்படத்தின் முக்கியக் காட்சிகள்

படமாக்கப்பட்டன. தனுஷ் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளத் தகவல் பரவியதைத் தொடர்ந்து, உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ரசிகர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
படப்பிடிப்பு இடைவேளையின் போது காரில் இருந்து வெளியே வந்து ரசிகர்களைப் பார்த்துக் கைகாட்டிய தனுஷைப் புகைப்படமும் வீடியோவும் எடுக்க ரசிகர்கள் முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ரசிகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதனையடுத்துப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரும் படப்பிடிப்புக் குழுவினரும் ரசிகர்களைச் சீரமைத்துச் சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
