Skip to content
Home » பெட்ரோல் பங்க் அருகே திடீரென தீப்பிடித்த எரிந்த 3 லாரிகள்…. 50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்…

பெட்ரோல் பங்க் அருகே திடீரென தீப்பிடித்த எரிந்த 3 லாரிகள்…. 50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்…

  • by Senthil

நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முதலைப்பட்டி புதூர் அருகே தனியார் டயர் நிறுவனம் உள்ளது. அதன் அருகிலேயே பெட்ரோல் பங்க் ஒன்றும் உள்ளது. இந்நிலையில், தீபாவளி அன்று விடுமுறை என்பதால், லாரி டிரைவர்கள் சிலர் ஒரு டேங்கர் லாரி, 2 சரக்கு லாரிகள் என 3 லாரிகள் பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைத்துவிட்டு சென்றனர்.

அவற்றில் ஒரு லாரியில் பல லட்சம் மதிப்பிலான காட்டன் துணிகள் இருந்தன. மற்ற இரு லாரிகளில் பொருட்கள் எதுவும் இல்லை. இந்த நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் திடீரென  3 லாரிகளும் தீப்பிடித்து எரிய தொடங்கின. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் முழுவீச்சில்
ஈடுபட்டனர். லாரிகள் பற்றி எரிந்ததற்கு மிக அருகில் பெட்ரோல் பங்க் அருகில் இருந்ததால், துரிதமாக செயல்பட்ட தீயணப்பு வீரர்கள் வேறு அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் ஒரு லாரியில் இருந்த துணிகள் முற்றிலும் எரிந்து நாசமானதால்,  50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த நல்லிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பட்டாசு வெடித்ததில் தீப்பொறிகள் ஏதேனும் விழுந்து தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!