தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை பிளஸ்2 தேர்வு தொடங்கியது. சுமார் 9.25 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள். தமிழகத்தில் 3,302 மையங்களில் இத் தேர்வு நடந்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் 7.72 லட்சம் பேர் இந்த தேர்வு எழுதுகிறார்கள். முதல் நாளான இன்று தமிழ்த் தேர்வு நடந்தது.
தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகள் முறைகேட்டில் ஈடுபடுவதை தவிர்க்க 3,200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. தேர்வு கூடங்களில் காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள்களை மாற்றுதல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மார்ச் 22ம் தேதி வரை நடக்கிறது.
அடுத்த தேர்வு 5-ந்தேதி ஆங்கிலம், 8-ந்தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ் தமிழ், ஹோம் சயின்ஸ், புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவுகள், 11-ந்தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், 15-ந்தேதி இயற்பியல், பொருளியல், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, 19-ந்தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், 22- ந் தேதி பயாலஜி, தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் 3, 4 நாட்கள் இடைவெளி உள்ளது.
தேர்வினை பதற்றமின்றி எழுதும்படி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.