போலி மருந்துகள் விற்பனையைத் தடுப்பதற்கும், மருந்துகளின் தரம் மற்றும் உண்மைத்தன்மையை பொதுமக்கள் எளிதாக சரிபார்க்கும் வசதியை உருவாக்குவதற்கும் மத்திய அரசு முக்கிய நடவடிக்கையை அறிவித்துள்ளது. இதன்படி, குறிப்பிட்ட முக்கிய மருந்துகளின் பொதிகளில் QR Code அச்சிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை 2027 ஜூலை 1 முதல் அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம், மருந்தை வாங்கும் பொதுமக்கள் தங்களது ஸ்மார்ட்போன் மூலம் QR Code-ஐ ஸ்கேன் செய்து, அந்த மருந்தின் முழு விவரங்களையும் உடனடியாக அறிந்து கொள்ள முடியும்.
QR Code மூலம் என்ன தகவல்கள் தெரியும்?
QR Code-ஐ ஸ்கேன் செய்தவுடன், அந்த மருந்தின் பல முக்கிய தகவல்கள் திரையில் தோன்றும்.
- மருந்தின் பெயர்
- தயாரிப்பு நிறுவனத்தின் பெயர்
- தயாரிப்பு தேதி
- காலாவதி தேதி
- Batch Number
- உற்பத்தி உரிமம்
- உண்மையான தயாரிப்பா என்பதை உறுதிப்படுத்தும் தகவல்
இதன் மூலம் போலி மருந்துகளை அடையாளம் காண்பது மிகவும் எளிதாகும்.
ஏன் இந்த புதிய விதி?
இந்தியாவில் போலி மற்றும் தரமற்ற மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இதனால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.
இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், மருந்துகளின் கண்காணிப்பு முறையை டிஜிட்டல் வடிவில் மாற்ற மத்திய அரசு இந்த QR Code திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுமக்களுக்கு என்ன பலன்?
இந்த புதிய நடைமுறையால் பொதுமக்கள் வாங்கும் மருந்து உண்மையானதா என்பதை சில வினாடிகளில் சரிபார்க்க முடியும். மேலும், தரமற்ற அல்லது போலி மருந்துகளை சந்தையில் இருந்து அகற்றவும் இது உதவும்.
மருந்தகங்கள், மருத்துவமனைகள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் இந்த QR Code முறை மூலம் மருந்துகளை எளிதாக கண்காணிக்க முடியும்.
