தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பிரசன்ன ராஜகோபால சாமி கோவில் தேரோட்டம் நடைப் பெற்றது. அய்யம்பேட்டையில் கிருஷ்ணன் கோவில் என்றழைக்கப்படும் ருக்மணி சத்யபாமா சமேத பிரசன்ன ராஜகோபால சாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் பிரம்மோத்சவ விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 28-ம் தேதி கொடியேற்றம் நடைப் பெற்றது. இதைத் தொடர்ந்து தினந்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. செவ்வாய் கிழமை வெண்ணைத்தாழி நிகழ்ச்சியும், இரவு குதிரை
வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ருக்மணி சத்யபாமா சமேத பிரசன்ன ராஜகோபால சாமி எழுந்தருள முக்கிய வீதிகள் வழியாக தேர் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.