மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது. இந்த காலகட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் ஜூன் 15 நிறைவடைந்து, மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லலாம் என்றிருந்த சூழ்நிலையில் பலத்த சூறைக் காற்றின் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் காற்றின் வேகம் குறைந்த காரணத்தால் நேற்றை தினம் காலை மீன் பிடிக்க கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அனுமதி அளித்திருந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடி அனுமதி டோக்கன் வாங்காமல் கடலுக்கு சென்றனர். நீண்ட இடைவெளிக்கு பின் கடலுக்குச் சென்ற மீனவர்கள், நிறைய மீன்கள் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் கடலுக்குச் சென்றனர். ஆனால் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி மீன்களை அள்ளிக் கொண்டும் விரட்டி அடித்துள்ளனர்.
இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் படகு ஒன்றுக்கு இரண்டு லட்சம் வரை நஷ்டத்துடன் கரை திரும்பியுள்ளனர். மேலும் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களுக்கு போதிய மீன்வரத்து கிடைக்காததால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு தீர்வுகாண வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.