ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 30 பேர் நேற்று முன் தினம் இரவு தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்கள் நாட்டு எல்லைக்குள் மீன்பிடித்ததாக மீனவர்கள் 30 பேரையும் கைது செய்து படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மீனவர்களை விசாரித்த நீதிமன்றம் 30 பேருக்கும் வரும் 23ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து, மீனவர்கள் 30 பேரும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மேலும், மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.