டெல்லியின் நஜப்கார் பகுதியை சேர்ந்தவர் அமன் ( 35). இ-ரிக்சா ஓட்டுநர். பழைய ரோஷன்புரா பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். 9 மற்றும் 5 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.
அமனுடைய மனைவி ரீல்ஸ் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்திருக்கிறார். இதுஅமனுக்கு பிடிக்கவில்லை. பல முறை கூறியும் அதனை மனைவி கண்டு கொள்ளவில்லை. இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை 4.23 மணியளவில் நஜப்கார் காவல் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில், மனைவியை அமன் கொலை செய்த சம்பவம் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி காவல் அதிகாரி ஒருவர் கூறும்போது, முதல்கட்ட விசாரணையில், மனைவி ரீல்ஸ் எடுப்பதற்கு அமன் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார். ஆனால், அவரோ தொடர்ந்து சமூக ஊடகங்களில் ரீல்சுகளை வெளியிட்டு வந்திருக்கிறார். அவருக்கு 6 ஆயிரம் பின்தொடர்வோர் உள்ளனர் என்றும் கணவரிடம் பெருமையுடன் கூறியுள்ளார். இது தொடர்பாக அந்த தம்பதியினரிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இன்று அதிகாலையும் இதுபோன்று வாக்குவாதம் ஏற்பட்டு அமன் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் போலீசார் வந்து அவரை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் போலீசார் இதுபற்றி பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தி கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.