மத்திய பிரதேசத்தின் திந்தூரி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, கிராமவாசிகள் சிலர் தங்களுடைய தேவரி கிராமத்திற்கு வாகனம் ஒன்றில் திரும்பி கொண்டிருந்தனர். பத்ஜர் கிராமம் அருகே ஷாபுரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 14 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர். அவர்கள்காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த மத்திய பிரதேச முதல்-மந்திரிமோகன் யாதவ், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.