திருப்பூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (62), இவரது மனைவி ஈஸ்வரி (53). இவரும் திருப்பூரிலிருந்து தாராபுரத்திற்கு உறவினர் வீட்டின் துக்க நிகழ்வுக்கு சென்று மீண்டும் தங்களது ஹோண்டா சிட்டி காரில் வீடு திரும்பினர். அப்போது, தாராபுரம் புறவழிச் சாலை வழியாக திருப்பூரை நோக்கி வந்த போது, காரின் அடிப்பகுதியிலிருந்து கரும்புகை கிளம்பியுள்ளது. இதனை கண்ட ஈஸ்வரமூர்த்தி மற்றும் இவரது மனைவி ஈஸ்வரி அதிர்ச்சி அடைந்து காரினை சாலையில் நிறுத்தினார்.

அதன் பிறகு அவர்கள் இறங்கிய சில வினாடிகளில் காரின் முன் பகுதி திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் காரின் அருகில் இருந்து தப்பி ஓடினர். அப்போது கார் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதையடுத்து, அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளும், கடைகாரர்களும் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், தீ கட்டுக்கடங்காமல் கொழுந்துவிட்டு எரிந்ததால் உடனடியாக தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதில் கார் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது.

மேலும், காரில் இருந்த செல்போன் மற்றும் காரில் வைத்திருந்த பொருட்கள், காரின் ஆவணங்கள் ஆகியவை முழுவதும் எரிந்து நாசமானது. இது குறித்து குண்டடம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து கார் எதனால் தீ பற்றியது என விசாரணை செய்தனர். புறவழிச்சாலை பகுதியில் கார் தீ பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.