தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றிய ரமணி என்பவர் நேற்று பள்ளியில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மதன்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன், ரமணி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
அதன்படி இன்று அந்த நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவிசெழியன் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் தாயார்
முத்துராணியிடம் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அப்போது தங்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்தினர் அமைச்சரிடம் கோரிக்கைவைத்து மனு கொடுத்தனர். இந்த நிகழ்வில் அமைச்சருடன் தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி, பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ அண்ணாதுரை, பேராவூரணி எம்.எல்.ஏ
அசோக்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.