உக்ரைன் மீது 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ரஷியா போர் தொடுத்தது. இந்த போர் தொடங்கி நாளையுடன் 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் நிறுத்தம் தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், ஒரு சில நிபந்தனைகளுக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொள்ளவில்லை.
அதன்படி, நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேரக்கூடாது, உக்ரைன் ராணுவ பலத்தை குறைக்க வேண்டும், உக்ரைனில் ரஷிய மொழி, கலாசாரத்தை பாதுகக்க வேண்டும் போன்றவை ரஷியாவின் நிபந்தனைகள் ஆகும். மேலும், போரில் ரஷியா கைப்பற்றிய உக்ரைனின் 4 மாகாண பகுதிகளில் இருந்து உக்ரைன் படைகள் முழுவதும் விலக வேண்டும் என ரஷியா நிபந்தனை விதித்துள்ளது.
ஆனால், இந்த நிபந்தனையை உக்ரைன் நிராகரித்துவிட்டது. அதேபோல், உக்ரைனின் சில நிபந்தனைகளை ரஷியா ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உக்ரைனின் ஒடிசா, செப்ரொசியா மாகாணங்கள் மீது இன்று ரஷியா ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.

